Wednesday, May 2, 2012

மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்

அறிமுகம்
மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் வன்முறை, தாக்குதல்கள் போன்ற குழந்தை அல்லது பதின்பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும், மன நோய் ஏற்படவும் இதற்கு காரணங்களாகின்றன. இத்தகைய காலப்போக்கிலான அனுபவங்களின் கூட்டு விளைவால் அதிக வாய்ப்புகள் ஏற்பட்டாலும், ஒரேயொரு பெரிய அதிர்ச்சியாலும் மன நோய்கள் ஏற்படக்கூடும். இதற்கெதிரான தாங்குதிறன் நபர்களை பொறுத்து மாறுகிறது. பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள், எண்ணங்கள், பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக தாங்குதிறன் வேறுபடுகிறது.
மன அழுத்தம் என்றால் என்ன?
Stress and Psychiatry
நோய்களை உண்டாக்க்க்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம். அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாக கூறலாம். பலவகையான மனவியல் காரணிகள் இருக்கின்றன. மன அழுத்தத்தை பலர் மன நோயுடன் ஒப்பிட்டாலும், விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இதை உடல்ரீதியான செயல்பாடு மற்றும் சமநிலையில் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இதை குறிக்கிறார்கள். தங்களை சுற்றி நடப்பவை காரணமாக அழுத்தம் ஏற்படும் போது, அதற்கு எதிர்வினையாக சில இரசாயனங்கள் சுரந்து இரத்தத்தில் கலக்கின்றன. இந்த இரசாயன்ங்கள் அவர்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் பலத்தை அளிக்கிறது.
குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்கிறோம். இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் (eustress - "positive stress") மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress - "negative stress"). மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.

மன அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள்
வாழ்வியல் அழுத்தம்
தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.

உள்நிலை அழுத்தம்
இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.

சுற்றுச்சூழல் அழுத்தம்
சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.

களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு
அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.
மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறுகிய (acute) மற்றும் நீண்ட கால (chronic) பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகைகளாவும் வகைப்படுத்தலாம்:
  • குறுகியகால காரணங்களால் ஏற்படும், உதாரணமாக ‘சண்டையிடு’ அல்லது ‘ஓடிவிடு’ வகை விளைவுகள், குறுகிய கால அழுத்தமாக கருதப்படுகிறது. இவை, ஆபத்துக்கள் அல்லது அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தாக்கும் போது மூளையின் பழைமையான பகுதி மற்றும் மூளையில் உள்ள சில இரசாயனங்களால் ஏற்படும் துரிதமான விளைவுகளாகும்.
  • சண்டையை அல்லது ஓட்டத்தைத் தூண்டும் காரணிகள் முடிந்த பிறகும் நடைமுறையில் இருக்கும் அல்லது தொடர்ந்த காரணிகள் நீண்டகால பாதிப்புக்களாக கருதப்படும். தொடர்ந்த அழுத்தம் ஏற்படுத்தும் வேலை, உறவுமுறை சிக்கல்கள், தனிமை, நிதிநிலை தொடர்பானக் கவலைகள் ஆகியவை இவற்றுள் சில.


மன அழுத்த்த்தால் ஏற்படும் விளைவுகளை அல்லது தாங்குதிறனை பாதிக்கும் காரணிகள்
ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் கீழ்கண்ட ஒன்று அல்லது பலவித காரணிகளால் ஏற்படுமாதலால், நபருக்கு நபர் இத்திறன் வேறுபடுகிறது. ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் காலகட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம்:
  • குழந்தைபருவ அனுபவங்கள் (கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்)
  • நபர்களின் செயல்முறைகள் (சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம்)
  • பரம்பரை (பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை)
  • நோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள் (மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் தாங்குதிறன் குறைகிறது)
  • வாழ்க்கைமுறை (சத்தில்லாத உணவு மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்)
  • மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தோன்றும் கால அளவு

மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்:
  • தூக்க தொந்தரவுகள்
  • பசியின்மை
  • குறைவான கவனம், ஞாபகமறதி
  • குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்
  • கோபம்
  • வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்
  • மனவியல்ரீதியான வெளிப்பாடுகள்
  • மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு
  • படபடப்பான நடவடிக்கைகள்

மன அழுத்த்த்தால் ஏற்படும் விளைவுகள்
உடல்ரீதியான விளைவுகள்
பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
  • படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு
  • அதிகரிக்கும், மேலோட்டமான மூச்சு வாங்குதல்
  • நடுக்கம்
  • குளிர் அல்லது வேர்த்து வழிதல்
  • ஈரமான புருவப்பகுதி
  • இறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல்
  • வயிற்று உபாதைகள்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • முடி கொட்டுதல்

மனவியல்ரீதியான விளைவுகள்
சரியான முறையில் சிகிச்சை பெறாத போது பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.
  • கவனம் செலுத்துவதில் சிரமம்
  • முடிவெடுப்பதில் சிரமம்
  • தன்னம்பிக்கை இழத்தல்
  • அடக்கமுடியாத ஆசைகள்
  • தேவையற்ற கவலைகள், படபடப்பு
  • அதீத பயம்
  • பயத்தால் பாதிப்புகள்
  • குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள்

செயல்பாட்டு விளைவுகள்
பாதிக்கப்பட்ட நபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதில் வெளீப்படுகின்றன:
  • அதிகமாக புகைபிடித்தல்
  • நரம்பியல் தூண்டல்கள்
  • அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல்
  • பற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள்
  • ஞாபக மறதி
  • விபத்துக்குள்ளாதல்
  • முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்
செயல்பாட்டு விளைவுகள் அபாயகரமானவை மற்றும் சமூக, தனிமனித உறவுகளை பாதிக்கக்கூடியவை.
தனிமை, வறுமை, சோகம், அழுத்தம், விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக்கெதிரான நோய் எதிர்ப்புத்திறனையும் குறைக்கின்றன.
ஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இரசாயணங்கள், முக்கிய வினை ஊக்கிகள், உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தம் உண்டாக்குகின்றன.

மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்
  • வயிற்று நோய்கள்
  • போதைக்கு அடிமையாதல்
  • ஆஸ்த்துமா
  • களைப்பு
  • படபடப்பு, தலைவலி
  • இரத்த அழுத்தம்
  • தூக்கமின்மை
  • வயிற்று, ஜீரண கோளாறுகள்
  • இருதய நோய்கள்
  • மனநிலை பாதிப்பு
  • உடலுறவில் செயல்பட இயலாமை
  • சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்
மனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol) மற்றும் DHEA (dehydroepiandrosterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.
ஹொம்ஸ் ராகே அளவீட்டின்படி (Holmes and Rahe Stress Scale), வாழ்க்கையை மாற்றும் விதத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த (Life Change Units) எண்ணிக்கையை சேர்த்து இறுதி மதிப்பீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, கணவன் அல்லது மனைவியின் இறப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு 100 மதிப்பெண்கள் தரப்படும்.
  • கூட்டு மதிப்பெண்கள் 300+ ஆக உள்ளபோது நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது
  • 150-299 கூட்டு மதிப்பெண்கள் – நோய்க்கு ஆளாகும் அபாயம் 30% வரை குறைவு
  • 150 கூட்டு மதிப்பெண்கள்- நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு


மன அழுத்தத்தை சமாளித்தல்
மன அழுத்த்த்தை நிர்வகிப்பது, அதை ஏற்படுத்தும் காரணிகளை அறிவதில் தொடங்குகிறது. சொல்வது போல் இது எளிதான காரியமல்ல. உண்மையான காரணிகளை அறிய, உங்கள் குணம், நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கூறும் சாக்குபோக்குகளை ஆராயுங்கள்:
  • உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தற்காலிகமானது என்று எண்ணுகிறீர்களா? கடந்த முறை அவ்வாறு ஏற்பட்டது எப்போது என மறந்தேவிட்டீர்களா?
  • உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வீடு அல்லது அலுவலக் வேலையுடன் தொடர்புபடுத்துகிறீர்களா?
  • உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு பிறர்தான் காரணம் என்று கருதுகிறீர்களா அல்லது இது இயற்கையானதே என நினைக்கிறீகளா?
உங்கள் காரியங்களுக்கு நீங்கள் பொறுபேற்கும் வரை, மன அழுத்தத்தை உங்களால் கட்டுப்படுத்த இயலாது.
மன அழுத்த விபரத்தை பதிவு செய்யுங்கள்
இவ்வாறான பதிவுகள் மூலம், வழக்கமாக அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் காணவும் அவற்றை தவிர்க்கவும் இயலும். மன அழுத்த பாதிப்பு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால், அதை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் பதிவு மூலம், நாளடைவில் ஒரு பொதுத்தன்மையை உணர முடியும்.
  • எதனால் மன அழுத்தம் ஏற்பட்ட்து (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
  • நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
  • உடல் மற்றும் மன்வியல்ரீதியாக எப்படி உணர்ந்தீர்கள்?
  • எப்படி நீங்கள் செயல்பட்டீர்கள்?
  • நீங்கள் இயல்பு நிலையை அடைய என்ன செய்தீர்கள்?
தற்போது மன அழுத்தம் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். இதற்கு உங்கள் பதிவுகள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் சமாளிப்பு உத்திகள் ஆரோக்கியமானதா அல்லது அழுத்தத்தை அதிகப்படுத்தும் வண்ணம் உள்ளதா? பலர், தங்கள் எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள் மூலம், மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள்
இவை தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:
  • புகை பிடித்தல்
  • அதிகமாக மது அருந்துதல்
  • அதிகமாக அல்லது குறைவாக உண்பது
  • தொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
  • நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது
  • அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது
  • அதிகமாக தூங்குவது
  • பிறரை தூற்றுவது
  • பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது
  • உங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை)
  • மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.
  • மன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்:

சூழ்நிலையை மாற்றுங்கள்
  • மன அழுத்த காரணியை நோக்குங்கள்
  • மன அழுத்த காரணியை மாற்றியமையுங்கள்

உங்கள் எதிர்வினைகளை மாற்றியமையுங்கள்
  • மன அழுத்த காரணியை பொறுத்து உங்கள் நடவடிக்கையை மாற்றியமையுங்கள்
  • மன அழுத்த காரணியை ஏற்றுக்கொள்ளுங்கள்

தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்கவும்
  • ’முடியாது’ எனக் கூறப் பழகுங்கள்: உங்கள் நிலைமையை அறிந்து அதற்கேற்றவாறு நடக்கவும். தனிநபர் அல்லது வேலை சூழ்நிலைகளில், உங்கள் திறனுக்கு மேற்பட்ட பொறுப்புக்களை ஏற்காதீர்கள். முடிக்க இயலாததை அடைய முயல்வது கண்டிப்பாக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
  • மன அழுத்தம் ஏற்படுத்தும் நபர்களைத் தவிருங்கள்: தொடர்ச்சியாக உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒரு நபரை நீங்கள் தவிர்க்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில், அவருடன் செலவிடும் நேரத்தை குறையுங்கள்.
  • உங்கள் சூழ்நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்: மாலை நேர செய்தி உங்களை அழுத்தமடைய செய்வதாக இருந்தால், தொலைக்காட்சியை நிறுத்திவிடுங்கள். போக்குவரத்து நெரிசலாக இருந்தால், போக்குவரத்து குறைவான பாதையை தேர்ந்தெடுங்கள். சந்தைக்கு சென்று பொருள் வாங்குவதை கடினமாக உணர்ந்தால், இணைய்வழியில் பொருட்களை வாங்குங்கள்.
  • பதற்றத்தை ஏற்படுத்தும் விஷயங்களை விவாதிப்பதை தவிர்க்கவும்: அரசியல் அல்லது மதம் சம்பந்தமான விவாதங்களில் உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால், அவற்றை தவிர்க்கவும். ஒரே நபருடன் அதே தலைப்பில் விவாதம் ஏற்படுமானால், அவ்விவாதத்தை தவிர்த்துவிடுங்கள்.
  • நீங்கள் அன்றாடம் முடிக்க வேண்டிய பணிகளை பட்டியலிட்டு நிறைவேற்றுங்கள்: உங்கள் வேலைத்திட்டம், பொறுப்புகள், அன்றாடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்யுங்கள். இது அதிகமாக இருந்தால், அவற்றை முன்னுரிமைப்படுத்துங்கள். உண்மையில் அதிகம் தேவையில்லாத பணிகளை கடைசிக்கு கொண்டு சென்று அவற்றை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

சூழ்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
  • உங்கள் எண்ணங்களை தேக்கி வைக்காமல், வெளிப்படுத்திவிடுங்கள்: எதாவது அல்லது எவராவது உங்களுக்கு தொந்தரவு செய்வதாக கருதினால், அதை மரியாதையான வழியில் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வாறு வெளிப்படுத்தாவிட்டால், விரோதம் வளர்ந்து சூழ்நிலை சிக்கலாகும்.
  • சமரசம் செய்துகொள்ள தயாராக இருங்கள்: பிறரை மாற்ற வேண்டும் என்று விரும்பும் அதே வேளையில், நீங்களும் மாற தயாராக இருக்க வேண்டும். இருவரும் சிறிது விட்டுக்கொடுக்க துவங்கும் போது, நல்ல தீர்வு கிடைப்பது எளிதாகும்.
  • உங்கள் நிலையில் உறுதியாக இருங்கள்: உங்கள் சொந்த வாழ்வில் பின்தங்கிவிடாதீர்கள். பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொண்டு சமாளியுங்கள். உங்களுக்கு தேர்வு இருக்கும் சமயம், உங்கள் அறைத்தோழர் அதிகமாக பேசுபவராக இருந்தால், நேரடியாக பிரச்சினையை விளக்கி பேச்சைக் குறையுங்கள்.
  • உங்கள் நேரத்தை சரியாக நிர்வகியுங்கள்: நேரத்தை சரியாக நிர்வாகம் செய்யாவிட்டால், அதிக மன உளைச்சல் உண்டாகும். வேலைகளை முடிக்க நீங்கள் திணரும் போது, அவற்றில் கவனம் செலுத்துதல் மற்றும் அமைதியாக இருத்தல் ஆகியவை சிரமமாகும். நீங்கள் சரியாக திட்டமிட்டால், உங்கள் மன உளைச்சலை குறைக்கலாம்.

மன அழுத்த காரணியை மாற்றியமையுங்கள்
  • பிரச்சினைகளை மாற்றியமையுங்கள்: பிரச்சினைக்குரிய சூழ்நிலையை வேறு கண்ணோட்டத்தில் அணுகி தீர்க்க முயலவும். போக்குவரத்து பிரச்சினையை பற்றி எண்ணி வருந்தாமல், அதை தனிமையாக செலவழிக்க கிடைத்த நேரமாகவும் நல்ல வாய்ப்பாகவும் கருதலாம்.
  • முழு சூழ்நிலையை கவனியுங்கள்: அழுத்த சூழலின் முழு பரிமாணத்தைக் காணுங்கள். நீண்டகால போக்கில் அது எப்படி மாறும் என்று கணித்து, அதற்கேற்ப உங்கள் சக்தி அல்லது நேரத்தை செலவிடுங்கள்
  • உங்கள் குணங்களை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்: முழுமையாக முடிக்க நினைப்பதே சில நேரங்களில் அழுத்தம் ஏற்படக் காரணமாகிவிடும். முழுமையை கருதி தோல்வியில் முடிய வேண்டாம். தகுதியான தர நிலையை மட்டுமே இலக்காக வைத்து, அதனை அடைய முயற்சிக்கவும்.
  • நேரிடையான எண்ணம் கொள்ளுங்கள்: மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உங்கள் வாழ்வில் சாதனையாக கருதுபவை மற்றும் உங்கள் தனிப்பட்ட நல்ல குணாம்சங்களை எண்ணிப் பாருங்கள். இதன் மூலம் பிரச்சினையின் உண்மை பரிமாணத்தை காணும் தெளிவு பிறக்கும்.

உங்களால் மாற்ற இயலாததை ஒப்புக்கொள்ளுங்கள்
சிலவகை காரணிகள் தவிர்க்க முடியாதவை. பிரியமானவர்களின் மரணம், கொடிய நோய்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றை தடுக்கவோ மாற்றவோ இயலாது. அவ்வாறான சூழல்களில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே சிறந்த அழுத்தம் தவிர்க்கும் முறை. இது சிரமமாக இருந்தாலும், நீண்டகால போக்கில் எளிதாக கைவசப்படும்.
  • முடியாதவற்றை கட்டுப்படுத்த முயல வேண்டாம்: அடுத்தவரின் நடத்தை போன்ற சில விஷயங்கள் நம்மால் கட்டுப்படுத்த இயலாதவை. அவற்றை கட்டுப்படுத்த முயலுவதை விட அவற்றுக்கு எப்படி நடந்துகொள்வது என சிந்திப்பது சிறந்தது.
  • தீதிலும் நன்மையை காண்பீர்: ‘நம்மைக் கொல்லாதவை, நம்மை வலிமையாக்குகின்றன’ என்ற பழமொழிக்கேற்ப, பிரச்சினைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக பார்த்து பழக வேண்டும். உங்கள் தவறான முடிவுகளால் பிரச்சினை ஏற்பட்டால், அதை ஆராய்ந்து, அனுபவங்களை பெற முயல வேண்டும்.
  • உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: நம்பிக்கையான ந்ண்பரிடம் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இவ்வாறு பகிர்ந்து கொள்வதால், உங்கள் மனக்குறை குறையும்.
  • மன்னிக்க பழகுங்கள்: முழுவதும் குறைகளற்ற உலகில் நாம் வாழவில்லை, தவறு செய்யாத மனிதரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். ஆத்திரம் மற்றும் ஆற்றாமையை விட்டொழியுங்கள். மன்னித்து மறப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை குறையுங்கள்.
சரியாக திட்டமிட்டு, கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கில் ஈடுபட்டால், மன அழுத்தத்தை நன்றாக கட்டுப்படுத்தமுடியும்.


புத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிகள்
  • நடைபயிற்சிக்கு செல்லவும்
  • இயற்கையில் அதிக நேரத்தை செலவிடவும்
  • நல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்
  • நன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்
  • உங்கள் புத்தகத்தில் எழுதுங்கள்
  • நீண்ட குளியலில் ஈடுபடவும்
  • மனமுள்ள மெழுகுவத்திகளை ஏற்றுங்கள்
  • சூடாக காபி அல்லது தேனீர் பருகவும்
  • செல்லப்பிராணிகளுடன் விளையாடவும்
  • உங்கள் தோட்ட்த்தில் வேலைகள் செய்யவும்
  • உடலுக்கு மசாஜ் செய்துகொள்ளவும்
  • நல புத்தகத்தை படியுங்கள்
  • நல்ல இசையை கேளுங்கள்
  • நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்
  • பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து புத்துணர்வு பெறுங்கள்.
  • பிறருடன் பழகுங்கள்: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள். இதனால் எதிர்மறை எண்ணங்களை குறைக்க முடியும்.
  • நீங்கள் விரும்பும் ஏதாவதொன்றை தினமும் செய்யுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக இசை, பிரயாணம் போண்றவை) ஈடுபடுங்கள்
  • நகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர முயலுங்கள். சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தை குறைக்கிறது

ஆரோக்கியமான வாழ்க்கை முறை
  • உணவுமுறையை சரிபடுத்துங்கள்: பிற சத்துக்களைப் போலவே, B வகை வைட்டமின்கள் மற்றும் மக்னீஸியம், வைட்டமின் C ஆகியவையும் மன இறுக்கத்தை குறைக்க அவசியத் தேவையாகும். எலும்புகள் வலுப்பெற வைட்டமின் D உதவுகிறது. ஆரோக்கியமான உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பலவித தாதுப்பொருட்கள் முக்கியம். தற்பொதைய உணவு முறையை ஆய்வு செய்து, அவற்றிலுள்ள குறைகளை நீக்குங்கள். கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு, மாத்திரைகள் ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்கவும்.
  • நச்சுத்தன்மை உடைய பொருட்களை குறையுங்கள்: புகையிலை, மது ஆகியவை தற்காலிகமாக மன இறுக்கத்தை குறைக்குமாறு தோன்றினாலும், உடல் சமநிலையை பாதிக்கின்றன.
  • உடற்பயிற்சியை அதிகப்படுத்துங்கள்: பொதுவாகவும், இறுக்கமாக உணரும்போதும், உடற்பயிற்சி செய்யுங்கள்:
    • அட்ரீனலின் அளவை குறைத்து, உதவிகரமான இரசாயனங்களை உற்பத்தி செய்து நன்மை அளிக்கும்.
    • மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறைக்கிறது.
    • இறுகிய தசைகளை இளக்குகிறது.
    • இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
    • உடல் நலத்தை அதிகரிக்கிறது.
  • சுய குணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இறுக்கம் உண்டாகும் சூழ்நிலைகளை அறிந்து, அவற்றை சந்திக்க தயாராக இருங்கள். யோகா, தியானம், ஹிப்னாடிசம், மசாஜ் போன்ற இறுக்கம் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
  • தூக்கம் மற்றும் ஓய்வு நல்ல சமநிலையான உடல்நிலைக்கு அவசியம். பகலில் குட்டித் தூக்கம் போடுவதும் நல்லதே. இதனால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. தேவையில்லாத எண்ணங்கள் குறைகிறது.
  • வேலை செய்யும் இட்த்தில் கோபமடைவது, மன இறுக்கத்தின் அறிகுறி. சம்பந்தபட்ட நபர் ஒப்புக்கொள்ளுதல், காரணமறிதல், ஈடுபாடு, ஆகியவை மூலம் மாற்றத்தை விரும்பினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். விழிப்புணர்வே முதல் படி. சிலர், தங்கள் கோபம் பற்றி பெருமைப்பட்டு, மாற விரும்புவதில்லை. சிலர் கோபத்தால் பிறர் பாதிக்கப்படுவதை உணருவதில்லை. அடிப்படை காரணத்தை கண்டறிய தக்க ஆலோசனைகள் தேவை. தங்கள் சுய விருப்பு வெறுப்பின்றி, அடுத்தவர் பாடிப்புக்களையும் உணர்ந்து, கோபம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். கோபப்படுவோருக்கு இத்தகைய உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். கோபத்தால் உடல்நிலை மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதை அவர்களுடன் விவாதியுங்கள். தங்களை விட்டு விலகி நின்று தங்களையே விமர்சிக்கும் அளவுக்கு அவரை மாற்றுங்கள். அடுத்து, கோபம் ஏற்படுத்தும் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். ஆலோசனை வழங்குபவர், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களை அவருடன் செலவழித்து, அவர் நம்பிக்கையை பெற்று, அவருக்கு வழிகாட்ட வேண்டும்.

No comments:

Post a Comment