காதல் என்பது என்ன என்று தெரியாமலேயே இன்றைக்கு பலரும் காதல் வயப்படுகிறார்கள்.
ஆண், பெண் இடையே நிகழும் ரசாயன
மாற்றம்தான் காதல் என்கின்றனர் சிலர். காதலை புதிர் என்றும் அது ஒரு மாயம்
என்பதும் ஒருசிலரின் கூற்று. காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க
முடியாத அனுபவம் என்பது பலரது வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித்
தெரிவதில்லை காதல் என்றும் சிலர் காதலை வர்ணிக்கின்றனர்.

ஆனால்
காதல் ஒருவரை தொடும்போது அவர் கவிஞராகிறார் என்கிறார் தத்துவஞானி
பிளாட்டோ. இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல். அதில், கற்பனையும்
சேரும்போது அழகான காவியமாகிறது என்கிறார் வால்டேர்.
நம்முடைய கவிஞர் வைரமுத்துவோ காதல்
வந்தால் கையெழுத்து அழகாகும் என்கிறார். எது எப்படியோ காதல் வயப்பட்டவர்கள்
தங்களின் காதலில் வெற்றி பெற நிபுணர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர்.
காதலிப்பவர்கள் அதை படித்துப் பாருங்களேன்.
நேர்மையான காதல்
காதலின் அடிப்படையே நேர்மைதான்.
உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை
என்பார்கள். ஒரு ஆணை தனது வாழ்க்கைத் துணையாக தேர்தெடுக்கும் போது இவன் நம்
மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில்
துணை இருப்பான், இவனின் அருகாமை ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது
ஆண்களுக்கும் பொருந்தும். இது எந்த இடத்தில் விரிசல் விடுகிறதோ அந்த
நொடியே காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.
விட்டுக்கொடுத்தல்
இருவரும் ஒரே இடத்தில் பணிபுரியும் போது
அது ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள காதல் உதவுகிறது. பணிபுரியும்
இடத்தில் நம்முடைய எல்லையை அடைவதற்கும், வாழ்க்கையில் வெற்றி பெரும்
வகையிலும் காதல் மாயவித்தை புரிகிறது.
ஆண், பெண் இருவரின் உள்ளங்கள் நம்பிக்கை,
நேசம், பாசம் ஆகிய இழைகளால் பிணைக்கப்படும்போது இருவரும் சேர்ந்து
உயருகிறார்கள். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது
வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது. இருவரின்
விருப்பங்கள் வெவ்வேறாக இருக்கலாம் காதலுக்காக விருப்பங்களை
விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
புரிந்து கொள்ளுதல் முழுமையான புரிந்து
கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம்,
போன்றவைதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக
நீட்டிக்க வைக்கும். நம்முடன் பணிபுரிபவரே நமக்கு காதலராக இருக்கும்
பட்சத்தில் தொடர்ப்பு கொள்வது எளிதாகிறது. உங்கள் காதலியின் கவனத்தைக் கவர
ஏதாவது புதிதாக முயற்சி செய்யுங்களேன். உங்கள் காதல் உங்களுக்கு எளிதில்
கைகூடும்.
உணர்வுகளுக்கு மதிப்பு
உடல் ஈர்ப்பாக மட்டுமல்லாமல் மன ஈர்ப்பு
ஏற்படும்போதான் உண்மையான காதலை உணர முடியும். நட்போடு பேசினால், நாலு
வார்த்தை ஆசையாகப் பேசினால் உடனே காதல் என்று கூறி விட முடியாது. கவிதை
எழுதுவது, பிடித்த பொருட்களை வாங்கித் தருவது, அவுட்டிங் கூட்டிச் செல்வது,
பணத்தை தாறுமாறாக செலவிடுவது இவையெல்லாம் கூட காதலாகி விட முடியாது.
உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும்
பாசாங்கு இருக்கக் கூடாது.
குழப்பம் வேண்டாம்
உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை,
பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை,
நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல். ஆனால் இன்றுள்ள
இளைஞர்களும் சரி, இளைஞிகளும் சரி காதல் எது, நட்பு எது என்று தெரியாமல்
குழம்பிக் கிடக்கிறார்கள்.
ஆறுதலாக, பரிவாக, பாசமாக, தோழமையோடு
யாராவது ஒரு பெண் பேசினால், உடனே அந்தப் பெண் மீது காதல் கொள்பவர்கள்தான்
நிறையப் பேர் உள்ளனர். இன்னும் சிலருக்கு காதல் கொண்ட வேகத்திலேயே
காமத்தின் தாக்கமும் ஏற்பட்டு குழப்பமாகி, கடைசியில் அந்தக் காதல் முறிந்து
போய் சோகத்தில் மூழ்கிப் போய் விடும் நிலையையும் இன்று காண்கிறோம்.
எதிர்ப்பை சமாளிக்கலாம்
காதல் பொறுமையானது, இரக்கமானது.
பொறாமைக்கும், வெறுப்புக்கும் இங்கு இடமில்லை. பகிர்ந்து கொள்ளுதல்,
விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள்
கலந்ததுதான் காதல். காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும்.
எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இருவரும் கலந்து ஆலோசியுங்கள்.
நேர்மையான வழியில் பரஸ்பரம் இணைந்து அந்த
பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்வதன் மூலம் காதலில் வெற்றி
கிடைக்கும். காதலில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தாண்டுவது என்பதில்
பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு
வழி வகுத்து விடலாம். எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக்
கொண்டாடுவோம்.