Saturday, April 28, 2012

கம்போடிய நாட்டின் ஆமைச் சிறுவன் !!

கம்போடிய நாட்டின் ஒரு கிராமத்தில் வசித்து வரும் 6 வயதுடைய டிடியர் என அழைக்கப்படும் சிறுவனுக்கு, அவனது முதுகில் ஆமை ஓடுபோல கெட்டியான சதைகள் வளர்ந்து அவனது உடலின் 2/3 பாகத்தை மறைத்திருந்தது.
டிடியர் என்ற இச் சிறுவனுக்கு பேய் பிடித்துவிட்டது என்றும் இவன் ஒரு சாத்தானின் பிறவி என்றும் கூறி இவனையும் இவன் குடும்பத்தையும் ஊரார் ஒதுக்கி வைத்தனர். ஆனால் மனிதர்களுக்கு இருக்கும் சாதாரண மச்சம் தான் இச் சிறுவனுக்கு மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்பதை யாருமே விளங்கிக்கொள்ளவில்லை.
மூட நம்பிக்கையாலும் கடவுளின் பெயராலும் இச் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சொல்லும்தரமன்று. மனிதர்களுக்கு சாதாரணமாக முகத்திலோ உடம்பின் வேறு பகுதியிலோ காணப்படும் சிறிய மச்சம் பெரிய அளவில் வளர்வது இல்லை. ஆனால் இச் சிறுவனுக்கோ அவனது மரபணுக் கோளாறினால் பெரிய அளவில் வளர்ந்து ஆமை போல ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டது.
இச் சிறுவனின் நிலையைக் கேள்வியுற்ற பிரித்தானியாவைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர், தான் இச் சிறுவனுக்கு உதவி செய்ய விரும்புவதாகத் தெரிவித்து அண்மையில் கம்போடியா சென்றார். அவரும் அவரது குழுவினரும் இச் சிறுவனுக்கு பலமணி நேரமாக அறுவைச் சிகிச்சை செய்து அவனது முதுகுப் பகுதியில் வளர்ந்திருந்த தேவையற்ற தசைகளை அகற்றினர்.
தற்போது இச் சிறுவன் நலமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மூட நம்பிக்கை, கடவுளின் சாபம், சாத்தானின் பிறவி என்றெல்லாம் குற்றம் சொல்லிய மக்கள் தற்போது தமது மூடக் கொள்கைகளை எண்ணிவெட்கப்படுவதோடு இச் சிறுவனையும் சென்று பார்த்து வருவதாக கம்போடியப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment