காதல் எதுவரை?
மனம் : கல்யாணத்தின் பின் ஒருவரையொருவர் காதலிக்க முடியாதா?
எதிர்மனம்
: காதலிக்கும் போதிருக்கும் சூழல் கல்யாணத்தின் பின் இருப்பதில்லை. சூழல்
மாறிவிடுவதால் காதலித்த மனிதர்களும் கல்யாணத்தின்பின் மாறிவிடுகிறார்கள்.
மனம் : காதல் என்பது உணர்வு. அதெப்படி மாறும்?
எதிர்மனம்: உணர்வையே அந்தந்தச் சூழல்தான் தீர்மானிக்கிறது.
மனம் : பொதுமைப்படுத்திக் சொல்வதால் எனக்கு விளங்கிக்கொள்ளக் கடினமாயிருக்கிறது.
எதிர்மனம்: நான் காதலித்தேன்.
மனம் : அட, புதிசாயிருக்கிறதே! யார் அவள்?
எதிர்மனம்: அவள் இப்போது திருமணம் செய்து குழந்தைகளுடன் இருப்பதால் அவளின் விபரங்களைச் சொல்ல விரும்பவில்லை.
மனம் : அவள் வேறொருவரைத் திருமணம் செய்திருக்கிறாளா?
எதிர்மனம்: ஆம்
மனம் : ஏன் ஒருதலைக் காதலா?
எதிர்மனம்: அப்படியென்றால்?
மனம் : நீ அவளைக் காதலித்தாய். அவள் உன்னைக் காதலிக்கவில்லை.
எதிர்மனம்:
நான் அவளைக் காதலித்தேன் என்று எனக்குத் தெரியும். அவள் என்னைக்
காதலித்தாளா என்று அவளுக்குத்தான் தெரியும். அவளும் என்னைக் காதலிப்பதாகவே
எனக்கு ஒரு உணர்வு இருந்தது.
மனம் : ஏன் நீங்கள் இதைப் பற்றி ஒருவருடன் ஒருவர் சொல்ல வில்லையா?
எதிர்மனம்: இதைத் தவிர எல்லாவிடயங்களையும் பற்றிக் பேசிருக்கிறோம்.
மனம் : ஏன் முக்கியமான விடயத்தைப் பற்றிக் சொல்ல வில்லை?
எதிர்மனம்: நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்பது முக்கியமான விடயமாக எங்களுக்குள் இருந்திருக்கவில்லை.
மனம் : இரண்டுபேரும் அறிவாளிகளாகத்தான் இருந்திருக்கிறீர்கள். சரி அதைவிடு. அவளை நீ காதலிப்பது உனக்கு எப்படித் தெரியும்?
எதிர்மனம்:
அவளைப் பார்த்ததில் பிடித்துப் போயிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருக்க
வேண்டும் போலிருந்தது. அவளுடையதும் என்னுடையதுமான பெரும்பாலான கருத்துகள்
ஒத்துப்போயிருந்தன. அவள் எனது வாழ்க்கைத் துணையாக இருந்தால் மகிழ்ச்சியாக
இருக்கும் என்று நினைத்தேன்.
மனம் : அப்பிடிப் போடு. பிறகேன் இதைப் பற்றி அவளுடன் கதைக்கவில்லை?
எதிர்மனம்: பயம்.
மனம் : அவளுடன் கதைப்பதற்கு உனக்குப் பயமா?
எதிர்மனம்:
இல்லை. அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் இதே போல அவளைத் தொடர்ந்தும் காதலிக்க
முடியுமா? இதேபோல அவளுடன் தொடர்ந்தும் பழக முடியுமா என்ற பல பயங்கள்.
மனம்
: என்னைக் கொலைகாரனாக்காதே. அவளை உனக்குப் பிடித்திருந்தது. அவளுடன்
சேர்ந்து வாழவும் விரும்பியிருக்கிறாய். அவளும் உன்னை
விரும்பியிருக்கிறாள். பிறகேன் உனக்குப் பயம் வருகிறது? உனக்கு உன் மீதே
நம்பிக்கையில்லையா?
எதிர்மனம்
: உனக்கு விளங்கும்படியாக சொல்ல எனக்கு முடியவில்லை. காதலிக்கும்போது
எந்தக் கட்டுபாடுகளுமில்லை. எந்தச் சுமைகளோ, பாரங்களோ இல்லை. இவற்றைவிட
முக்கியமான விடயம் நானும் அவளும் தனித்தனி மனிதர்கள் என்ற உணர்வு
இருப்பதால் ஒருவரையொருவர் அவரவர் பலம்/பலவீனங்களுடன் அங்கீகரிக்க
முயல்கின்றோம். குடும்பம் என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட நிறுவனம். அதற்குள்
போய்விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குரிய சட்ட திட்டங்களை
ஏற்றுக் கொள்கிறோம். ஒருவர் மற்றவரின் சொத்தாகவோ பொருளாகவோ ஆகிவிடுகிறோம்.
குடும்பப் பாரங்கள் அதிகரிக்கின்றன. எனக்கும் அவளுக்குமிடையிலான மெல்லிய
உணர்வுகள் சாகடிக்கப்படுகின்றன. அல்லது அவற்றுக்கு நேரமில்லாமல்
போய்விடுகிறது. இறுகிப்போன சட்டங்களுக்குள் மனித உறவுகளுக்கு அர்த்தமில்லை.
மனம்
: அட, இதுதான் விசயமா? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? உலகம் எங்கேயோ
போய்விட்டது மகனே! நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்ய் வேண்டும்?
நண்பர்களாகச் சேர்ந்து வாழலாமே?
எதிர்மனம்:
அவளுக்கு இதில் உடன்பாடில்லை. பெண் என்ற ரீதியில் அவளுக்கிருக்கும் மேலதிக
பயங்கள், பாதுகாப்பின்மை, சமூக அழுத்தங்களை நான் விளங்கிக் கொண்டேன்.
அதனால் அவளை வற்புறுத்தவில்லை. இதைவிட, சேர்ந்து வாழ்வதில் கூட
குடும்பங்களுக்குரிய வடிவம் மறைமுகமாக இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.
மனம் : சரி, இப்போது அவளையே நினத்துக்கொண்டு இப்படியே இருக்கப்போகிறாயா?
எதிர்மனம்
: அருகில் இருக்கும்போது மட்டுமே நெருக்கம் இருக்கும். அவளது நினைவுகள்
இனிய ஞாபகங்களாக் இருக்கின்றன. அவ்வளவுதான். இனிவரும் நாட்களில் நான்
இன்னும் ஒருவரையோ இருவரையோ அல்லது பலரையோ காதலிக்கலாம். யாருக்குத்
தெரியும்!
எளிமையாக புரிந்து கொள்வதற்காகவும் காதலின் ஒருவகைப்பற்றியது மட்டுமே இந்த பதிவு
No comments:
Post a Comment